Thursday, February 6, 2014

எறும்பு - சில தகவல்கள்



எறும்புகளுக்கு மூன்று இணைப்புகளை உடைய 6 உறுதியான கால்கள். எனவே வேகமாக ஓடும். 

 

எறும்பின் அளவுக்கு அது ஓடும் வேகத்தோடு கணக்கிட்டால் அதே அளவில் மனிதன் ஓடினால் ஒரு பந்தயக் குதிரையின் வேகம் இருக்க வேண்டும். தன்னுடைய உடல் எடையைப் போல 20 மடங்கு அதிகமான எடையை எறும்புகளால் தூக்க முடியும்.

 

எறும்புகளுக்கு சாதாரணமாக ஆயுள் 45-60 நட்கள்.  ராணி எறும்புகள் 30 வருடங்கள் வரை கூட வாழும். (அட!)


எறும்புகளுக்கு பல சிறு கண்களைக் கொண்ட இரு பெரிய கண்கள். இரண்டு வயிறுகள். ஒன்று அதன் பசிக்கு. இன்னொன்று மற்ற எறும்புகளுக்கு பகிர்ந்து கொடுக்க. 



 

இதன் ரத்தம் நிறமற்றது.


 

ஒரு குறிப்பிட்ட குழுமத்தில் (சமூகத்தில்) அல்லது குழுவில் உள்ள எறும்புகள் தமக்கிடையே செய்திகளைப் பரிமாறிக் கொள்ள வேதிப்பொருள்களைப் பயன்படுத்துகின்றன (chemical communication)


ராணி எறும்பு இடும் முட்டைகளைப் பாதுகாக்கும் வேலைக்கார எறும்புகள் மிகவும் சுத்தமானவை. எந்த அளவு என்றால் உதாரணத்துக்கு அந்தக் காலனியில் இருக்கும்/சேரும் குப்பைகளைக் கொண்டுபோய் அதற்கென்று இருக்கும் பகுதியில் போடும் இயல்புடையன. 

 

ஒவ்வொரு எறும்புக் குழுவுக்கும் ஒவ்வொரு வாசனை உண்டு. இதை வைத்தே அன்னியர் உள்ளே வந்தால் அவை அவர்களை அறிகின்றன. ராணியை இழந்த எறும்புக் கூட்டம் சில மாதங்களே பிழைத்திருக்கும். வேலைக்கார எறும்புகளால் இனப் பெருக்கம் செய்ய முடியாது.



சிப்பாய் எறும்புகளும் உண்டு. ராணியைப் பாதுகாக்கவும், பக்கத்து எறும்புக் குழுக்களைத் தாக்கி ஆக்கிரமிக்கவும், அங்கிருக்கும் முட்டைகளை இங்கு கொண்டு வந்து சேர்த்து அடிமை எறும்புகளை உருவாக்கவும் செய்கின்றன.
 



 

சில எறும்புகள் நீந்தும். சில எறும்புகள் 24 மணி நேரத்துக்கும் மேலாக நீருக்கடியில் தாக்குப் பிடிக்கும். சில எறும்புகளுக்குக் கண்கள் கிடையாது. எறும்பு அடிக்கடித் தூங்கிவிடும் பழக்கமுடையது. எறும்பின் எதிரி மனிதன் அல்ல, எறும்பேதான்!
 

பூச்சி வகைகளிலேயே பெரிய அளவிலான மூளை எறும்புக்குத்தான்.


ஒட்டுண்ணிகளை அழிக்கும் ஒரு திரவத்தை (ஃபார்மிக் ஆசிட்) உமிழும் எறும்புகளைச் சில பறவைகள் தங்கள் சிறகில் ஏற்றிக் கொள்கின்றன. தங்கள் இறகுகளை ஒட்டுண்ணிகளிடமிருந்து இந்த வகையில் அவை பாதுகாத்துக் கொள்கின்றன.

எறும்புகளுக்குக் காதுகள் கிடையாது. அதிர்வுகளைக் கொண்டே சப்தங்களை அறிகின்றன.

நுரையீரல் இல்லாததால் உடம்பில் உள்ள சிறு துளைகள் வழியே ஆக்சிஜன் உள் செல்வதும், அதே துளைகள் வழியாகவே கார்பன் டை ஆக்சைட் வெளிவருவதும் நிகழ்கின்றன.

பெரு நாட்டில் மழைக்காடுகளில் வாழும் செஃபலோடிஸ் ஏட்ரியஸ் இனமே முதன் முதலில் கண்டறியப்பட்ட சறுக்கும் எறும்பாகும். 



 

ஏதோ ஒரு காரணத்தால் மரத்தில் இருந்து இவை கீழே விழ நேர்ந்தால் பல நூறு அடி கீழே போவதோடு நீரில் விழுந்து உயிர்விடவோ அல்லது வேறு விலங்குக்கு இரையாகவோ நேரிடலாம். இதைத் தவிர்க்கும் பொருட்டு இந்த எறும்புகள் கீழே விழ நேர்கையில் தங்கள் பார்வைத் திறனைப் பயன்படுத்தி (பிற எறும்புகளுக்குப் பார்வைத் திறன் குறைவென்பதாலேயே ஃபெரமோன்களைப் பயன்படுத்தி ஒன்றையொன்று பின் தொடர்கின்றன.) மரத்தின் தண்டுப் பகுதியைச் சரியாக வந்தடைகின்றன.




தான் வசிக்குமிடத்திலிருந்து 200 மீட்டர் - 655 அடி -  இரை தேடிச் செல்லும் ஒருவகைப் பாலைவன எறும்புகள் எப்படி வழி தொலையாமல் மறுபடி இருப்பிடத்தை அடைகின்றன என்று இங்கு  படித்தேன்.

தஞ்சை வேங்குராயன் குடிகாடு பகுதியில் உள்ள வீடுகளில் படையெடுக்கும் எறும்புகளால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்று வீடியோவுடன் செய்தி தினமலரின் இந்தப் பக்கத்தில்!


எறும்பைப்பற்றி ஒளவையார்....  !
  • வெறும்பந்த யங்கூற வேண்டாம் புலவீர்
             எறும்புந்தன் கையாலெண் சாண்.
  • அன்னாய்! யானை, எறும்பு, ஈ முதலான அத்தனைக்கும் உளமகிழ்ந்து உணவளித்துக் காக்கும் அரன் அற்பனோ? எனக்குக் கல்வி புகட்டிய அவனுக்கு என்னைக் காக்கும் கடமை இல்லாமலா போய்விட்டது?




7 comments:

G.M Balasubramaniam said...


எங்கள் வீட்டு மாமரத்தில் சிவப்பு எறும்புகள் சற்றே பெரிய சைஸ் மாவிலைகளை சுருட்டி ஒரு பந்துபோல் பின்னுகிறது. அவை கடித்தால் வலி அதிகம் இவை விபூதி தெளித்தால் சுருண்டு விழுந்து இறக்கின்றன. ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குப் போக எறும்புகள் பின்பற்றும் முறையைக் கண்டு கணினி சாஃப்ட் வேர் டெவலப் செய்ய உதவியாய் இருந்ததாக யாரோ சொன்ன நினைவு,

திண்டுக்கல் தனபாலன் said...

எறும்புகளிடமிருந்து இன்றைய மனிதன் கற்றுக் கொள்ள வேண்டியவைகள் நிறைய உள்ளன...

இராஜராஜேஸ்வரி said...

எறும்புகளுக்கு உணவு அளித்தால் கண்பார்வைக்கோளாறுகள் நீங்கும் என்பது நம்பிக்கை ..

எனவேதான் அரிசிமாவில் கோலம் போடும் பழக்கமும் ,

அரசமரத்தடி பிள்ளையாருக்கு பச்சரிசியும் வெல்லமும் படையல் போடுவதும் ,

அரிசிமாவு , சர்க்கரை கலந்து தூவுவதும் நடைமுறையில் இருக்கிறது ..!

ராமலக்ஷ்மி said...

ஆச்சரியமளிக்கும் பல தகவல்களை அறிந்து கொண்டேன். நன்றி.

KILLERGEE Devakottai said...


மனிதனையே மதிக்காத மனிதர்க(ல்)ள் வாழும் சமூகத்தில் எறும்புக்கு முக்கியத்துவம் கொடுத்து அதன் நல்ல விசயங்களை பகிந்தமைக்கு பாராட்டியே தீரவேண்டும் நண்பரை.
Killergee
www.killergee.blogspot.com

கோமதி அரசு said...

எறும்புகள் பற்றிய விரிவான செய்திகள்.
தன் எடையைவிட பெரிதாக தூக்கி கொண்டு போவது ஆச்சிரியமாக இருக்கும் எனக்கு.
தன் எடையைவிட 20 மடங்கு என்பது அதன் மனவலிமையை காட்டுகிறது.
நன்றி பகிர்வுக்கு.

பனித்துளி சங்கர் said...

எறும்பு பற்றிய தகவல் அருமை நானும் எறும்பு பற்றி ஒருமுறை ஒரு சில வருடங்களுக்கு முன்பு எழுதி இருக்கிறேன் .